Friday, 31 January 2014

மாதர்க்குண்டு சுதந்திரம்

விளக்கிலே திரி நன்கு சமைத்தவர்
பெண் விடுதலை என்ற குரல் விடுதலைப் போராட்டத்தோடு ஒருங்கிணைந்து பிறந்த குரல். நமது சுதந்திரத்துக்கு என்ன வயதாயிற்றோ அதைவிட நூறு வயது அதற்குக் கூடுதல்.
    உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெண்கள், விடுதலை பெற்று வந்த அந்தக் காலகட்டத்தில் உரிமை வேட்கையின் உடன்பிறப்புத் தீயாக, அது நம் நாட்டில் நுழைந்த்து.
    தமிழ்மொழியில் அதை வரவேற்ற தலைமக்கள் வரிசையில் பாரதி முதலிடம் பெற்றவர். உடன் கட்டை ஒழிப்பில் தொடங்கி, பால்யத் திருமணம், விதவைத் திருமணம், பெண் கல்வி, பெண் சமத்துவம் என்று அது பற்பல சுடர்களாகப் பரவிப் படர்ந்ததைக்  குதூகலத்தோடு வரவேற்றுக் கொண்டாடியவர் மகாகவி.
    தமது பணி முன் கூறிய சமுதாயச் சீர்திருத்தங்களோடு நின்றுவிடவில்லை என்ற உணர்வு அவருக்கு இருந்தது. ஆண் பெண் என்ற இரு பாலருக்கு மிடையேயான சீரான சமவுணர்வுநிலை சமைப்பதை முக்கிய கடமையாக அவர் கருதினார்.
    ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட முக்கிய நெறியாக அவர் கருதிய கற்பு நெறியே, பெண் விடுதலை விஷயத்தில் ஆண்கள் காட்டும் பின்னடைவுக்குக் காரணம் என்பதையும் அவர் கூர்மையாக உணர்ந்திருந்தார்.
    அதனாலேதான் “ பெண்கள் விடுதலைக்கும்மியிலே
    “கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு
    கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்“
என்றார். இதற்கான விரிவான விவாதத்தை ஒரு வழக்கறிஞரும் அறுவை மருத்துவரும் எவ்வாறு மனம் கூசாது தம் கடமையாற்றுவார்களோ அவ்வாறு தமது “பதிவிரதை“ கட்டுரையிலே எழுதினார்.
    “ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று  எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.
    ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல இதர ஸ்தீரீகளின் பதிவிரத்த்திலே காட்டுவதில்லை...
    அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்?
    கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம் ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள்.
    அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்தபக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும்.
    இந்தக் கூட்டில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது    .
    அந்த இருபதினாயிரம் வ்யபிசாரிகளில் நூறு பேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள்.
    ஆனால் அவளவளுடைய புருஷனுக்கு அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.
    ஆகவே பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே, பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்தீரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி  நடைபெற்று வருகின்றன.
    சீச்சி! மானங்  கெ ட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை.
    “இதென்னடா இது! “என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?“ என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப் போல மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது...
    ... சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜபக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்திசெலுத்தாவிட்டால் சிறைச்சாலையிலே போடுவோம என்றம் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.
    அந்த அரசுபோலேதான், ஸ்தீரிகள் மீது புருஷர் செய்யும் “கட்டாய ஆட்சியும்“ என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும்.    கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?“
    இப்படி பாரதி எழுதிச் செல்லும்போது அவருக்குக் கற்பின் மீது நம்பிக்கை போய்விட்டது. கற்பு என்பது கதைக்கப்படும் பொருள் என்று அவர் கருதுவதாக எவரும் எண்ணிவிடக்கூடாது.
    புதுமைப்பெண் பாடலில்
    குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்“ என்றும் “தமிழ்நாட்டு மாதருக்கு“ கட்டுரையில்
“தமிழ்நாட்டு மாதருக்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச்சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீ எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்“ என்று எழுதினார்.
    கற்பு என்பது உன்னத மனித தரிசனம் என்று நிலைநாட்டிய பாரதி அதைக் காக்க வேண்டிய பொறுப்பினை ஆணுக்கும் பங்கிட்டு வைத்தார்.
    அறிவு கொண்ட மனித வுயிர்களை
    அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்
    நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடர்
    நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே
    சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள்
    தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
என்று புதுமைப்பெண் பாடலில் அவள் வாயால் புதிய நீதி கூறவைத்தார்.
    கற்பு என்ற பெயரில் பெண்களே சில மூடப்பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதையும் பாரதி எடுத்துக் காட்டத் தவறவில்லை. “தமிழ்நாட்டு மாதருக்கு“ கட்டுரையில்
    “குழந்தைப் பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத் தொங்கவிட்டுத் தோள் வரையிலும், சில சமயங்களில் மார்பு வரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது.
    கற்பு எங்ஙனம் ஸ்வதர்மமோ  அதுபோலவே காது வளர்ப்பதும் ஸ்வதர்ம
மென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலே நினைக்கிறார்கள்.
    குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழங்கங்களாயினும் அவற்றுள் முக்கியத் தன்மையுடையன எவை. இல்லாதன எவை என்ற ஞானம் தம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின் அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதன மில்லை”.
    பெண் மூட நம்பிக்கையைச் சுட்டிக் காட்டிய பாரதி அதற்குக் காரணமும்  காட்டினார்.
    அடுத்து அதிகாரமின்றி ஆணுக்கும் பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு உபாயமும் சொன்னார்.
    “ஸ்திரீகள், புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும்.    நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று அரசனாயினும் குருவாயினும் புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது.
    அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது
    அடுத்து பாரதி பெண்களுக்குத் தமது துணைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பரிபூரணமாக உண்டு என்று அனுமதிக்கிறார்.
    “வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”
என்று பெண்கள் விடுதலைக்கும்மியிலும்
    “ஸ்தீரிகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்தீரி அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி“ என்று தமிழ்நாட்டின் விழிப்பு கட்டுரையிலும் தெளிவாக அறிவித்தார்.
    பெண்களை அடிமைப்படுத்திய  கொடுமைவிதிகள். ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்ற ஓர் எண்ணம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தை வீட்டில் அவர்கள் காட்டிய வழக்கம், நல்ல விலைக்கு நாய் விற்பவர் அதனிடம் யோசனை கேட்காது போவது போல் பெண்களைக் கொல்லத் துணிவின்றி அவர்களை அந்த நாய் நிலையிலே கட்டி வைத்த அகந்தை, இவையாவும் ஆண்கள் செய்து வைத்த சட்டத்தினால் தான் என்பது பாரதி பார்வை.
    இதை தமிழ்நாட்டு நாகரீகம் கட்டுரையில் அவர் குறிப்பிட்டார்.
    உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண் மக்களாலேயே விதிக்கப்பட்டது“ அதை அப்படியே விட்டு வைக்கக் கூடாது.
    சட்டம் இயற்றும் உரிமை ஆணுக்கு மட்டும் சொந்தமில்லை என்று பாரதி கொடுத்த போர்க்குரல் தான் பின்வரும் வரிகள்.
    “பட்டங் களாள்வது ஞ் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
    எட்டு மறிவினி லாணுக்கிங் கேபெண்
    இளைப்பிலை காணென்று கும்மியடி
    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி
    சாதம் படைக்கவுஞ் செய்திடு வோந்  தெய்வச்
    சாதி படைக்கவுஞ் செய்திடுவோம்”
பெண்களின் அந்த மனத் துணிவிற்கு கல்வி தவிர வேறு வழியில்லை என்று உய்த்துணர்ந்த மகாகவி “தமிழ் நாட்டு மாதருக்கு கட்டுரையிலே -
    “ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்கு பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண் மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள்“ என்றார்.
    தமிழ்ப் பெண்களின் இயற்கை அறிவின்மீது பாரதிக்கு இணையிலாத நம்பிக்கை. அதைப்பற்றி அவர் அதே கட்டுரையில் குறிப்பிடும் போது
    “இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கை யறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம்.
    ஔவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா?    சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின் தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவிடுவார்கள்.
    அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிஸு லபமாய் விடும்; எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள் தமிழ்ச் சகோதிரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள்“
    ஔவையார் மீது பாரதிக்கு மஹாபக்தி, தமிழ்ப் பெண்மையின் அறிவுக் கூர்மைக்கும் கடமைப் பற்றுதலுக்கும் வடிவமாகத் திகழ்ந்த அவரைப் பற்றி தமிழ்நாட்டு நாகரிகம் கட்டுரையில்
    கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லாருக்கும் குறள், நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஔவையின் நூல்களில் அகப் பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன.
    “ஔவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப் பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார்.
    மேலும் அவர் சிறந்த ஆத்ம ஞானி ;  யோக சித்தியால் உடம்பை முதுமை, நோவு சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.
    ... கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச் சிறந்தவராக்க் கருதப்பட்ட ஔவைப் பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக் கூடும்.
    “தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?“ ஔவையின் நூல்களை இழந்து விடப் பிரியமா?” என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின் -
    “ மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்“ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
    “...ஒள்வையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஒர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதினின்றும்  ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத் திறமையிலே குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ ? என்று போதிக்கக்  கூடிய நிலைமையிலிருக்கிறார்கள் (பெண்கள்) - என்ற எழுதினார்.
    பெண்ணை ஆண் அடிமை செய்ய அனுமதிக்கக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும்.
எந்த வழியில்?
இக்கேள்விக்கு காந்தியடிகளின் சாத்வீக எதிர்ப்பையே பெண்கள் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் போர் முறையாக பாரதி சிபாரிசு செய்தார்.
    பாரதியின் குமாரி தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப்பெற்ற பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது? என்ற கட்டுரையில் -
    “நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.
    இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர்  செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம் குருஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போலே, திகைக்கிறது.
    ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே சாத்வீக எதிர்ப்பினால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன்.
    ...ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்-
    “நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே  தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதைவிட்டு வெளியேறவும் மாட்டேன்“ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும்.“
    பெண் அப்படி முரசறைந்து கூறிவிட்டுத் தன் பலவீனங்களை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அவள் கட்சி தோற்றுவிடும் என்பது பாரதிக்குப் புரிந்திருந்தது . அதை நாசூக்காக அதே கட்டுரையில் சுட்டிக் காட்டினார்.
    “இங்ஙனம் கூறும் தீரமான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வை ப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக் கூடாது.
    “பரிபூரண ஸமத்வ மில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம்” என்று சொல்வதனால் நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக் கூடிய கொடுமைகள் எத்தனையோவா யினும்,    எத்தன்மை யுடையவையாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும் நாம் அஞ்சக் கூடாது!“
    விவாகரத்து குறித்து பாரதிக்கு முழு மனதான ஒப்புதல் இல்லை....
    நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் கட்டுரையில் விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக்கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம்அதற்குரிய ஏற்பாடுகள் செய்வோம்“ என்றார்.
    எனினும் அந்த விவாகரத்து உரிமை முற்றிலும் அவர்களுக்கு இல்லையென்று ஒதுக்கிவிடுதல் தீங்கு என்று புரிந்து வைத்திருந்தார்.
    பெண் விடுதலை கட்டுரையில்
    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது“ என்று ஒரு விதி வகுக்கிறது.
Free Sex  எனப்படும் விடுதலைக் காதல் பற்றி பாரதிக்குக் கடும் விமர்சனம் உண்டு.
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலா மென்பார் அன்னோர்
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தாற் கலந்தன்பு பிரிந்து விட்டால்
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டு மென்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போ லாண்மக்கள் புவியின்மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்

இங்கே கற்பைப் பற்றிய உள்ளுணர்வு பாரதிக்கு மீண்டும் தோன்றுகிறது.
ஆணெல்லாங் கற்பைவிட்டு தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையுந்தா னெரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெலா மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே!
விதவைத் திருமணம் பற்றி ஆணியடித்தது போன்ற கருத்து பாரதிக்கு உண்டு.
    “இந்தியாவில் விதவைகளின் பரிதாப நிலை“ என்ற கட்டுரையில்
“எல்லா விதவைகளும் மறுமணம் செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்கு செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று மற்றப் பேச்செல்லாம் வீண் கதை” என்கிறார்.
    பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டால் பெரிய பிரளயம் ஒன்றும் நேர்ந்து விடாது என்பதைக் குறித்து எழுதும்போது பாரதியின் பேனாமுனை பரிகாசத்தின் உச்சத்திற்கே சென்று குலுங்கக்  குலுங்கச் சிரிக்க வைக்கிறது.
    பெண் விடுதலை (2) கட்டுரையில் -
“இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண் கல்வி ஏற்பட்டால் மார் ஒழுக்கத்தில் தவறிவிடுவார்களென்று ஒரு கருத்து தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.
    அண்டச்சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்ததால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து, பூமியின் முன்விழும் என்றும் வால் நக்ஷத்திரம் வகையராக்கள் எல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள்.
    “மதறாஸ் மெயில்“ போன்ற ஆங்கிலேய ப் பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்ஜியம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள்.
    “ஓஹோ! ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரத்திரரை க் கொல்வார்கள். பிறகு ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள்.
    அப்பால், மஹாராஷ்டிரர்  தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள்.
    பிறகு மலையாளிகள் தமிழ்ப்பார்ப்பாரையும் தமிழ்ப்பார்ப்பார் திராவிடரையும் சூர்ணமாக்கி விடுவார்கள் சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மாலையாகப் புனைவர்“ என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார்”
    பெண் விடுதலைக்கு பாரதி வைத்த வாதம் மிகவும் எளிமையானது தர்க்கமயமானது பகுத்தறிவு பூர்வமானது. தவிர்க்கவோ சாக்குப்போக்கு சொல்லவோ இடம் தராதது.
    தாய்க்குலமே லிங்கேயோர் தெய்வ முண்டோ?
    தாய்பெண்ணே யல்லளோ!
தமக்கை, தங்கை வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணே யன்றோ!
மனைவி யொருத் தியையடிப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
தாயைப் போ லேபிள்ளை யென்று முன்னோர்
வாக்குளதன் றோ? பெண்மை யடிமை யுற்றால்
மக்களெலா மடிமையுறல் வியப்பொன்றாமோ?
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறரா மென்பான்;
நாட்டினிலே நாடொறு முயன்றிடுவா னலிந்து சாவான்
பெண்களின் உரிமக்கு துந்துபி முழக்கியவர் மகாகவி அதன் பல்வேறு விகாசங்களை அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் அலசி “விளக்கிலே திரி நன்கு சமைத்தவர்“ என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment