சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
பாரதி மாடமாளிகைகளில் அமர்ந்து கீழே மைதான வெளியில் மிதந்த இயற்கை எழிலைப் பார்த்துக் கவி எழுதியவர் அல்ல, மேலே விண்ணில் பறந்து கவிப்புள்ளாகிக் களித்துத் திரிந்தவர்தான்.
ஆனால் அவருக்குப் பசி தெரியும். பசியின் கொடுமை புரியும், சுற்றிலும் மக்கள் சோற்றுக்குத் துடிக்கும் துடிப்பு தெரியும்.
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே
என்று பாரத ஜனங்களின் தற்கால நிலைமை கவிதையிலே பாடினார் அவர்.
அவர் வாழ்ந்த காலத்தில், சுதந்திரமடைந்துவிட்ட பின்பும் தற்போதுள்ள நிலை போன்றே பசித்த வயிறுகள் நாடுமுற்றும் ஒருவரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தன.
பாரதி மாடமாளிகைகளில் அமர்ந்து கீழே மைதான வெளியில் மிதந்த இயற்கை எழிலைப் பார்த்துக் கவி எழுதியவர் அல்ல, மேலே விண்ணில் பறந்து கவிப்புள்ளாகிக் களித்துத் திரிந்தவர்தான்.
ஆனால் அவருக்குப் பசி தெரியும். பசியின் கொடுமை புரியும், சுற்றிலும் மக்கள் சோற்றுக்குத் துடிக்கும் துடிப்பு தெரியும்.
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே
என்று பாரத ஜனங்களின் தற்கால நிலைமை கவிதையிலே பாடினார் அவர்.
அவர் வாழ்ந்த காலத்தில், சுதந்திரமடைந்துவிட்ட பின்பும் தற்போதுள்ள நிலை போன்றே பசித்த வயிறுகள் நாடுமுற்றும் ஒருவரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தன.
செல்வம் (2) என்ற கட்டுரையில் அதைக் குறிப்பிடும்போது,
“கோடிக்கணக்கான ஜனங்களை வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும், லட்சக் கணக்கான ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சி கிடைக்காமலே பட்டினியால் கோர மரணமெய்தும் படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு க்ஷணங்கூடச் சகித்திருப்பதில் நியாயமில்லை” என்று மனம் குமுறினார்.
மக்கள் சோற்றுக்கு அலைவது அவரது தார்மீகச் சினத்தை தீப்போல் கனலவைத்தது. மறவன் பாட்டிலே -
“ஏழை யெளியவர்கள் வீட்டில் - இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்”
என்றும்
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்?
என்றும் வெடித்தார்.
மனிதர்களின் உணவை மனிதர்களே பறிப்பது அவருக்கு மனிதகுலத்தில் போது இகழ்ச்சியாகவும் பொதுத் துன்பமாகவும் புலப்பட்டது.
தமது செல்வம் (2) கட்டுரையில் மிருகங்களை விட மனிதர் கீழ்நிலைக்குச் சென்ற வீழ்ச்சியை எழுதினார்.
“நான்கு பன்றிகள் அல்லது நாய்கள் கூடி யாதேனும் ஒரு ஊரில் அல்லது ஒரு காட்டில் கிடைக்கக்கூடிய ஆஹார முழுவதும் தங்களுக்கே தஸ்தாவேஜூப்படி சொந்தம் என்றும் தாங்களாக இஷ்டப்பட்டு தாங்கள் திட்டம் செய்து கொடுக்கும் அளவுப்படிதான் மற்றெல்லாப் பன்றிகள் அல்லது எல்லா நாய்களும் உண்ணக்கூடுமென்றும் விதி போடுகிற வழக்கம் (மனிதருக்குள் இருப்பதுபோல்) அந்த ஐந்துக்களிடையே காணப்படுவதில்லை…
இந்த அம்சத்தில் மனிதருடைய நாகரீக நிலை மற்றெல்லா மிருகங்கள் பக்ஷிகள் முதலியவற்றின் நாகரீக நிலையைக் காட்டிலும் தாழ்வானது”
பாரதியின் காலத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினியில் மக்கள் மடிந்திருக்கிறார்கள். இது அவரது கவியுள்ளத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது.
அதே கட்டுரையில் அவர்,
“மனிதஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும் பொதுக் கஷ்டமாகவும் ஹிந்துக்களுக்கு விசேஷ அவமானமாகவும் விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அந்த நோயை நீக்கி இந்தியாவிலும் பூ மண்டலத்திலும் ஸகல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாக பயமில்லாதபடி அரைவயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவரசங்களைக் காட்டிலும் பெரிய அவசரம் என்று நான் கருதுகிறேன்” என்று எழுதினார்.
இதற்கு உடனடி மருந்தாக அவருக்குத் தோன்றுவது ஒரே ஓர் உபாயம்தான்.“மாலை” கட்டுரையில் அவர் அதைத் தெளிவாக்கினார்.
“பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது… ஒருவன் ஊருடன் கூடி வாழ விரும்பினால் ஊருக்கு வயிறு நிறைய அன்னம் போட வேண்டும். சிற்சிலர் புதிதான தர்மங்கள் கண்டுபிடிக்கின்றார்கள். ஏழைக்கு அன்னம் போடுவதுதான் உத்தம தர்மம். இது முற்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுக்கு வயிற்றுக்குக் கஞ்சி காட்முடியாவிட்டால், அந்த தேசத்தில் எவ்வளவு பெரிய வித்வானிருந்தும் பிரயோஜனமென்ன? நாகரீகம் உயர்வதினாலே போஜனம் குறைவாக இருந்தால் அந்த நாகரீகம் அவசியமில்லை.”
இதையே கவிதையிலும் பாரதி சொன்னார்.
“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்”
தமது “பாரத ஸமுதாயம்” கவிதையில் பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் என்று வள்ளுவர் கூறியதற்கு ஒரு படி மேலே சென்று -
“இனியொ ருவிதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவில்லை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம்”
என்று முரசறைந்தார்.
ஒரு மகாகவி தன் தலைமுறையும் தன் மக்களும் என்ற வரைமுறையோடு நின்று விடுபவன் அல்ல. அவன் உலக முழுமைக்கும், எதிர்வரும் பல தலை முறைகளுக்கும் சொத்து.
எனவே தன்னைச் சூழ்ந்துள்ள பல பிரச்சனைகளில் என்றென்றும் தீர்த்தே தீரவேண்டிய பிரச்னையை அவன் உலகக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். மனித இம் முழுமைக்குமாக காலங்கடந்த தூர நோக்குடன் தீர்மானிக்க வேண்டும்.
செல்வம் (2) கட்டுரையில் -
“உலகத் துன்பங்கள் அனைத்திலும் கொடியதான இந்த ஏழ்மைத் துன்பத்தை ஸமாதான நெறியால் மாற்றக் கூடிய உபாயமொன்றை நாம் கண்டுபிடித்து நடத்துவோமானால் அதினின்றும் நமது நாடு பயனுறுவது மட்டுமேயன்றி உலகத்தாரெல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நம்மை அடைவார்கள்” என்று எழுதினார்.
“வறுமையும் பசியும் மனித சமுதாயத்தை விட்டு நிரந்தரமாகத் துரத்தப்பட வேண்டும் என்பது அந்த மகாகவியின் மாறாச்சிந்தனையாக இருந்தது.
No comments:
Post a Comment