Friday, 31 January 2014

ஏதிலர் தரும் கல்விப் படுகுழி

ஏதிலர் தரும் கல்விப் படுகுழி
    பாரதிக்கு இளமையில் தாம் பெற்ற ஆங்கிலக் கல்வி மீது தீராத வெறுப்பு இருந்தது. திருநெல்வேலிக்குச் சென்று பள்ளியில் கல்வி பயில்க என்று அவரது தந்தை அனுப்பி வைத்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில் -
    புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
        போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்
    நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
        நாடு விப்பது போலவும், எந்தைதான்
    அல்லல் மிக்கதொர் மண்படு கல்வியை
        ஆரியர்க்கிங் கருவறுப் பாவதை
    நரியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள்
        நாயெனத்திரி யொற்றர் உணவினைப்
    பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும்
        பேடி யர்பிறர்க் கிச்சகம் பேசுவோர்
    கருதுமிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
        கலை பயில்கென வென்னை விடுத்தனன்
என்று தமது சுயசரிதையிலே எழுதினார். அத்தகைய ஏட்டுக்கல்வி ஒரு மண்ணுக்கும் பயன்படுவதில்லை என்று கண்டு அவர் மனம் கொதித்தது.
    கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர் பின்
        கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
    அணிசெய் காவிய மாயிரங் கற்கினும்
        ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்;
    வணிக மும்பொருணூலும் பிதற்றுவார்;
        வாழு நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்;
    துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
        சொல்லு வாரெட்டுணைப்பயன் கண்டிலார்
என்று வரிசையாக, நம் தமிழ்நாட்டின் பெருமை, பாரதத்தின் சிறப்பு இவற்றைப் பற்றி எழுதிச் சென்றவர் அவற்றில் எதையுமே அறியாத ஞான சூனியம்தான் ஆங்கில ஏட்டுக்கவி பயில்வோருக்கு மிஞ்சுகிறது என்பதை சீற்றத்தோடு குறிப்பிடுகையில்
    “அன்ன யாவு மறிந்திலர் பாரதத்
        தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
    முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
        மூண்டி ருக்குமிந் நாளி னிகழ்ச்சியும்
    பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
        பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்”
என்றார். அத்தகைய கல்விமுறை பற்றி பாரதிக்கு இருந்த கருத்து" ஏதிலர் தருங் கல்விப் படுகுழி, ஏறியுய் தற்கரிய கொடும்பிலம்” தீதியன்ற மயக்கமும் ஐயமும்செய்கை யா யாவினுமே அசிரத்தையும் வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெங்குகை” என்பது  தான்,
    அதனால் ஒரு பயனும் இல்லை என்பதைக் கூற வருகையிலோ -
    நலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
        நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்
என்று மனோ தீரத்தோடு  சாடினார், தாம் அக்கல்வி முறையால் சீரழிந்து விடாது தப்பியது பற்றிக் குறிப்பிடுகையிலோ
    விலைமுன் செய்நல் வினைப்பய னாலு நற்
        தேவி பாரத் தன்னை யருளினும்
    அலைவு றுத்துறும் பேரிருள் வீழ்ந்து நான்
        அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே
என்று நிம்மதிப் பெருமூச்சுடன் நன்றி கூறுகிறார்.
    நமது கல்வி முறை, தேச நலன்களுக்கு முற்றிலும் விரோதமான கல்வி முறையாக இன்றுபோல் அன்றும் இருந்திருக்கிறது. அத்துடன் அந்நிய ஆதிக்கத்திற்கு அடிவருடல் செய்ய முயன்றிருக்கிறது.
    அதன்  சீர்கேடுகளைப் பற்றி சீற்றக்கவி பாடி மட்டும் பாரதி தம் கடமை தீர்ந்தது என்று சும்மா இருக்கவில்லை.. சிந்தித்து அதற்கு மாற்றுகளும் கண்டு  எழுதினார்.
    தேசீயக்கல்வி என்ற கட்டுரையிலே பயிற்று மொழி தமிழாகவே இருக்க வேண்டும் என்று எழுத முனைந்து “தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப் படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்”
    “காளயுக்தி” என்ற தலைப்பில் காளயுக்தி வருஷம் தொடங்கியபோது எழுதிய குறிப்பில் பாரதி -
    “தமிழ்  நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரம் முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும்…”
    …“நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை குச்சி எலலாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். “ஸ்லேட் பென்சில்” என்று சொல்லக் கூடாது.
    நாம் இன்று அறிவியல் தமிழ் உருவாக்குவதில், சொற்களைத் தமிழ்ப் படுவதில் உள்ள சிக்கல்களைக் கடக்க முயன்று வருகிறோம்.
    அதே கட்டுரையில் பாரதி-
    இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப் படுத்த வேண்டும்.
    திருஷ்டாந்தமாக “ஆக்ஸிஜன்”, ஹை ட்ரஜன்” முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு ஜலவாயு என்ற நாமங்களையே வழங்கவேண்டும்.
    தமிழ்ச் சொற்கள் அகப்படா விட்டால் ஸம்ஸ்கிருதப் பதங்களை வழங்கலாம் பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ், சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும்.
    இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.
    ஆனால் குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது.
    பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரம் இங்கிலீஷில் சொல்லலாம். வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.. என்கிறார்.
    தொடக்க ப் பள்ளிக் கூடங்கள் அமைப்பதற்கு வேண்டிய ஒரு பாடத் திட்டத்தையே பாரதி (அ) எழுத்து, படிப்பு, கணக்கு, (ஆ) லேசான சரித்திரப் பாடங்கள் (இ) பூமி சாஸ்திரம் (ஈ) மதபடிப்பு (உ) ராஜ்யபௌதீக சாஸ்திரம் (ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப்பயிற்சி, வியாபாரம் (ஐ) சரீர பயிற்சி (ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்) என்று பத்து தலைப்புகளிட்டு விரிவாக எழுதிச் செல்கிறார்.
    அவற்றை முழுமையாக அப்படியே மீண்டும் இங்கு தருவதைவிட ரத்தினம் போன்ற சிற்சில சுருக்கங்களைத் தருவது மகாகவியின் உள்ளக்கிடக்கையை நன்கு புரிந்து கொள்ள உதவும்.
    “வேதகால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பௌத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதானத்தின் சரித்திரம் இவை மிகவும் கற்பிக்கப்பட வேண்டும்.
    இந்தச் சரித்திரங்களில் மஹாகீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாஹத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தை களுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
    அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன.
    ஆதலால் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளையும் , அசோகன், விக்கிரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜுனன்   இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகள் மனதில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப் படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும்.
    …பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள் இவற்றைப் பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.
    ...உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகள் குணங்களையும், ஸர்வதேசபக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவதயை முதலிய புராதன வீர்ர்கள் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்த்த வேண்டும்.
    ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதலை, முதலியனவே ஜன ஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.
    ... உலகமே காற்றாலும் மண்ணாலும் நீராலும் அமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்து விடக் கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்று அந்த மூடக் கொள்கையை தமது தேசத்தில் இளஞ் சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும் படி செய்து விட்டார்கள்.
    சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன. அசைக்க முடியாதன மறக்க முடியாதன.
    எனவே நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகு மட்டும் இந்த பெரும் பயத்துக்கு ஆளாகி தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்.
    பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.
    ... இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும், விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்கியமான கைத்தொழிலாகும்.
    நன்செய்ப் புன்செய்ப் பயிர்த் தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குக்கள் விளைவிக்கும் தோட்டங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று.
    ...தோட்டத் தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப்பயிற்சியே மிகவும் விசேஷமானது பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து, ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலிய அவசிய கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றாம்.
    ... படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை யெடுக்கும்படி செய்ய வேண்டும். சுவரில்லாமல் சித்திர மெழுத முடியாது.
    பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.
    ...பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும் தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள், விழாக்கள் முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின், உட்பொருளைக் கற்பித்துக் கொடுத்தல் நன்று.
    திருவிழாவிற்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும் படி செய்ய வேண்டும்.
    வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும் அன்பும் பரஸ்பர சம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
    மலைகள், கடலோரங்களுக்கு அழைத்துச் சென்ற இயற்கையின் அழகுகளையும் அற்புதங்களையும் பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும்.
    இத்தகைய கல்வியை வழங்கவேண்டிய ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற அம்சத்தையும் பாரதியின் கூரிய பார்வை கணிக்கத் தவறவில்லை. அதே கட்டுரையில்,
    “தமிழநாட்டில் ஏற்படும் தேசீய பாடசாலைகளில் உபாத்தியாயர்களாக வருவோர் திருக்குறள், நாலடியார், முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும்.
    சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வர்தமாபிமானமும் எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உள்ள உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று.
    அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைக்காத போதிலும் பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
    ஆரோக்கியமும் திடசரீரமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று.
    பெண்கள் கல்வி கற்கவேண்டும் என்பது பாரதியின் பெருவிருப்பம்.
தமது மாதர் என்ற கட்டுரையில்,
“தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! உங்களிடம் எத்தனையோ அரிய திறமைகளும், தந்திரங்களும், உயர்ந்து இருந்தபோதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்லாதபடியால், அவ்வப்போது வெளியுலகத்தில் நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டு அதற்குத் தக்கபடி நடக்க இடமில்லாமற் போகிறது” என்று குறிப்பிடுகையில் வெளிப்படுகிறது.
    “தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக் கல்வித் தோணியே பெருந்துணையாம்“.
    மகாகவி தமது மொழியும் இனமும் மேம்பாடுற தேசீயக் கல்வியே, சிறந்ததெனக் கண்டவர். அக்கல்வியைப் பெறுவதில் ஆண், பெண் என்று வேற்றுமை கூடாது என்று தெரிந்தவர்.
    அவர் தமிழ்க்கல்வியே, தமிழின் மூலமே பயிற்றுவிக்கப்படும் கல்வியே, தேச நலனுக்கு உகந்த்து என்று உறுதியாக இருந்தவர்.
    தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்” என்றார்.
    கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கும் அம்சத்திலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பங்கு கேட்டார்.
    “தமிழ்க் கல்விக்கும் தமிழ்கலைகளுக்கும், தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக் கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?“ என்று காரணம் காட்டினார்.
    … அவர்கள் (பெண்கள்!) பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும், ஆண் மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை. முன்பு தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஔவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?“ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment