Wednesday, 5 February 2014

எல்லாமாகிக் கலந்து நிறைந்தபின்

எல்லாமாகிக் கலந்து நிறைந்தபின்
பொதுவான மனித இயல்பு மனித அளவீடுகளுடன் மட்டும் நின்றுவிடுகிறது. மனிதன் பெற விரும்பும் பேறுகள், அவன் வெற்றிகள் ஆகியன காதல், செல்வம், வீரம் புகழ் என்ற மனித வரம்புகளோடு நின்றுவிடுகின்றன.
    சில அசாதாரண மனிதர்கள் உண்டு. அவர்களின் உயிர் கொள்ளும் உறவுகள் மேற்கண்டவற்றோடு மட்டும் நின்று விடுவதல்ல.
    பறவைகள், மிருகங்கள், புழு பூச்சிகள் என்று உயிரிகள் அமைந்த எல்லா வடிவங்களோடு அவை உறவு கொள்கின்றன.பாரதி கூறுகிறார்.
மகத் என்றால் பெரியது. பெருமை உடையது.
பெரியது எதனால் பெரியதாகிறது?
சிறியவை, தத்தம் வரம்புகளில் ஒடுங்கி விடுபவை.
 பெரியவை பல்வகை உயிர்களை ஆரத்தழுவி தன்னுள் கண்டு, ஒடுக்கி உணர்ந்து லயிப்பதிலே தான் பெரியதாகிறது.என்று விளக்குகிறார்
    மகாகவி பறவைகளின் மீது மிகவும் நேசம் கொண்டவர். ஒரு குயிலும் சில குருவிகளும் அவரது கவிதையிலும் உரை நடையிலும் அடிக்கடி வந்து போகின்றன.
    குயில் அவருக்கு உயிர்ச்சுவையின், உயிர் தரித்ததால் உணர நேர்ந்த இன்பங்களின் அளவு க்குக் குறியீடு (Symbol)
    குயில்பாட்டை மீண்டும் படிக்கும் போது கன்னிக்குயில், ஒற்றைக்குயில், மாயக்குயில், கானக்குயில், சின்னக்குயில், பிள்ளைக்குயில், நீலக்குயில், சிறுகுயில், நீசக்குயில், ஒப்பில்லா மாயத்தொரு குட்டிப் பிசாசக் குயில், செத்தைக்குயில், வன்னக்குயில், பொய்மைக்குயில், எத்துக் குயில், வஞ்சக்குயிலி என்று பல்வேறு பெயர்களில் செல்லமாகவும், அதன் வஞ்சனையால் பாதிக்கப்பட்டவர் போலவும் பாரதி அழைப்பது காணலாம்.
    மண்ணில் உள்ள இன்பங்கள் யாவினுக்கும் உருவகமாகத் தென்படும் குயில் அவற்றின் மயக்கி ஈர்க்கும் சாகசங்களுக்குச் சின்னமாக அவருக்குத் தென்பட்டிருக்க வேண்டும்.
    இதனாலேயே அவர் குயிலை அத்தனை பெயர்களால் அழைக்கிறார்.
    சிட்டுக்குருவி பாரதிக்கு மிகவும் பிடித்த பறவை . அது ” எட்டுதிசையும் பறந்து திரிவதும் ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவதும், மட்டுப்படாது எங்கும் கொட்டிக் கிடக்கும் வானொளி என்னும் மதுவின் சுவை உண்டு பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்று பீடையிலாதவோர் கூடு கட்டிக் கொள்வதும், முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி, முந்த உணவு கொடுத்து அன்பு செ்யவதும்  மட்டும் காரணமல்ல
     சிட்டுக்குருவி பாரதிக்கு விடுதலையின் குறியீடாக விளங்கியது.
    குயிலோ பாரதிக்கு உயிர் இன்பத்தின் குறியீடு.
    வெறும் நாட்டின் விடுதலை மட்டுமல்ல.
    சிட்டுக்குருவி உயிர்களை மாட்டிப்பூ ட்டும் எல்லாத் தளைகளிலிருந்தும் கிட்டும் விடுதலை.
    அதனால் தான் -
    “விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே”
என்று அவர் பாடினார்.
    பாப்பாவுக்குப் பாட்டு சொன்ன போது
    “சின்னஞ்சிறு குருவி போலே - நீ
    திரிந்து பறந்துவா பாப்பா - என்றார்
    சிட்டுக்குருவி கட்டுரை தமிழ் உரைநடை கண்ட ஓர் அமிர்தத்துளி எனும்படி மகாகவி எழுதிச் செல்கிறார்.
    “சிறிய தானியம் போன்ற மூக்கு” சின்னக்கண்கள், சின்னத் தலை, வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித்துளிக் கால்கள்” என்று நுனி  நுட்பச் சுவையோடு அறிமுகம் செய்கிறார்.
    “சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை யுண்டாகிறது” என்கிறது.
    உடலை அது லாகவத்துடன் சுமந்து செல்வது, அதற்குத்  தலை நோவு வராதது. மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போல அரிக்கும் கவலைத் தொகுதி அதற்கு இல்லாதது தான் அவர் பொறாமைக்குக் காரணம்.
    சிட்டுக்குருவி மீது அவர் கொண்ட அன்புக்கும் அதன் வேறு சிறப்புகளும் காரணம்? அதே கட்டுரையில் எழுதினார்.
    “குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை, குருவிக்கு வீடுண்டு ; தீர்வை கிடையாது. நாயகனில்லை; சோகமில்லை”
    குருவியின் பேச்சினை பாரதி மொழி பெயர்க்கிறார்.
    “இந்தக் குருவி என்ன சொல்கிறது. விடு ,,விடு..விடு.. என்று கத்துகிறது. இஃது  நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது.
    பாரதிக்குக் குருவி விடுதலையின் குறியீடாகத்  தோன்றும் போதே அந்த விடுதலை எத்தன்மையது என்று உணர்த்தத் தோன்றுகிறது.
விடு, விடு, விடு  - தொழிலை விடாதே, உணவை விடாதே, கூட்டைவிடாதே, குஞ்சை விடாதே, உள்ளக்கட்டை அவிழ்த்துவிடு, வீண் யோசனையை வீடு துன்பத்தைவிடு”
    “ஜகத்சித்திரம்” என்ற சிறு நாடகத்தில் கிளியாக வும் காக்கையாகவும் அணிற் பிள்ளையாகவும் பசுமாடாகவும், நாகணவாயாகவும், எருமைமாடாகவும் பாரதி மாறி மனச்சித்திரம் தீட்டிக்காட்டுகிறார்.
    அதில் கிளி ஒருமுறை சொல்கிறது.
“இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை”
    மற்றொரு முறையோ -
    ”காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை”
    கண்ணனைப் பல வகை மனித உறவுகளில் பாடிய பாரதி கண்ணனைத் தாயாகக் காணும்போது -
    “இறகுடைப் பறவைகளும் - நிலந்
    திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள்
    அறைகடல் நிறைந்திடவே - எண்ணில்
    அமைத்திடற் கரியபல் வகைப்படவே
    சுறவுகள் மீன்வகைகள் - எனத்
    தோழர்கள் பலருமிங் கெனக்களித்தாள்”
,இப்படி எல்லா விலங்கினங்களையும் தமது தோழர்கள் என்று கருதும் கருத்தே ஒரு புதிய வீச்சு கொண்டது ஒரு நேசப்பான்மையுடையது.
    அந்த நேசத்தினால்தான் பாரதிக்கு மாமிச உணவின் மீது வெறுப்பு மிருகங்களை நாகரீகப்படுத்தும் வழி கட்டுரையில்-
“மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியும் பூ மண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப்படுத்தவில்லை.
    குட்டிகளைப் பட்டினி போட்டுத்தான் தீர்வை கறந்து வாங்கித் தன் வயிற்றில் அஜீரணமுறப் புதைக்கும் கொடுங்கோலனைப் போல், தன் குடிகளாகிய மிருக பக்ஷி கீடங்களில் பலவற்றைத் தின்று பிழைக்கும் ஈன வழக்கத்தைக் கைக்கொண்டிக்கின்றான்.
மனிதன் செய்யும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாகப் புலப்பட்டிருக்கிறது.
    மனிதன் செய்யக்கூடிய பாபங்கள் அனைத்திலும் இதுவே மிகக்கொடிய பாபம் என்று என் புத்திக்கு ஐயந்திரிபற விளங்கியிருக்கிறது” என்று விரிவாகவும் மனசில் தைக்கும்படியும் குறிப்பிடுகிறார்.
    விலங்குகளை வதைப்பது அவற்றைத் தின்ன விரும்புவது இவற்றை ஒரு மனச்சாட்சியின் சுடுகுரல் போல் பாரதி சாடுகிறார்,
 “மிருகங்களைச் சீர்த்திருத்தல்” என்ற கட்டுரையில் -
    “நமது முன்னோர் பசுவை மாதா என்று சொல்லி வணங்கினார்கள், நாம் அவர்களை (ஈக்வாலிடி) ஸமத்வம் (லிபர்டி) விடுதலை (ப்ரெடர்னிடி) உடன்பிறப்பு, தெரியாத மூடர்கள் என்று சொல்லி மேற்படி பசுக்களைக் கறி சமைத்துத் தின்ன இச்சிக்கிறோம். அதன் பாலை ஊட்டி நம்முடைய குழந்தைகளை வளர்த்தும். ஏன்? நினைப்பில்லாமல்.போடா! என்று சினந்து ஒரு சொல் கூறிவிட்டுத் தொடர்கிறார்.
    வெள்ளைக்காரன் சொன்னான் “யோக்கியதை உத்தம மார்க்கம்” நியாயமான வார்த்தை.    மாட்டை நாம் தாய்போலவே நினைப்பது யோக்கியதையா? கறி சமைத்துத் தின்பது யோக்யதையா? குயில்பாடுகிறது. கந்தருவர் கேட்டுத் தலை அசைக்கியார்கள். நீ ஏன் அம்பு போட்டு அதைக் கொல்கி றாய்?“
    அதே கட்டுரையில் மற்றோரிடத்தில் ஒரு விரோதமான கருத்தைச் சொல்கிறார்.
    அதே கட்டுரையில் மற்றோரிடத்தில் ஒரு விநோ தமான கருத்தைச் சொல்கிறார்.
    “மிருகங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டு அவற்றிற்கு நல்ல வழி காண்பித்து அவற்றை சீர்திருத்துதல் மிகவும் அவசியம்”
    ஆனால் அது பயனில்லை என்று மேலே வாதித்துச் சென்றுவிட்டு
“தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிற ஜந்துக்களைத் திருத்த அதிகாரம் பெற மாட்டான். தன்னைத்தானே திருத்திக்  கொள்வதே பிரதானம். தன்னைத் திருத்த அமரனாகச் செய்து கொள்க. அதுவே ஒருவன் செய்ய வேண்டிய தலைமைத் தொழில்” என்று முடிக்கிறார்.
    தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு சிந்தையில் போற்றும் அந்த மன விரிவு தான்
    எல்லா மாகிக் கலந்து நிறைந்த பின்
    ஏழைமை யுண்டோடா? - மனமே!
என்றும்
    உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
    உள்ளங் குலைவதுண்டோ?“
என்றும் வியாபிக்க வைத்து பாரதியைத் தெளிந்த ஞானியாக்கியிருக்கிறது.

No comments:

Post a Comment