Wednesday, 5 February 2014

பொருள் செய்தல் முதற்கடன்

. பொருள் செய்தல் முதற்கடன்
    ஒரு மகாகவிக்கு அன்றாட வாழ்வு பற்றிய அக்கறை இல்லாமற் போவது இயல்பு “லௌகீகம்” என்று சொல்லப்படும் உலக வாழ்வு பொருள் திரட்டும் பணியிலே பணத்தை அச்சாக வைத்துத் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை அறிவான்.
  எனினும்   பூமியை விட்டு சற்றே உயரப் பறந்து கொண்டிருக்கும் அவன் அறிவு, அத்தகைய வாழ்வைச் சாரமற்றது என்று ஒதுக்கிவிடும். அப்படி அவன் உதறி நின்றாலும்
“அவன் மகாகவிப்பா! அவன் வேறு” என்று உலகமும் ஏற்கும்.
    பாரதி சொந்த வாழ்வில் ஞான கம்பீரத்துடன் பணத்தை மதியாமல் வாழ்ந்தவர் தான் எனும் பணத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர் அல்ல.
    பணம் என்பது திரட்டப்பட வேண்டிய பொருள்.
அதுவும் பொருளில்லார் பொருளைத் திரட்டியாக வேண்டும் என்று அவர் மிகத் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்.
    கவியின் பணி இன்புறுத்துவதும் அறிவுறுத்துவதும் மட்டுமல்ல; வழி காட்டுவதும் கூட என்ற செய்தியை திருவள்ளுவரிடமிருந்து அவர் மிகக் கூர்மையாகக் கிரகித்திருந்தார்.
“பொருளிலார்க்கிலை யிவ்வுல” கென்ற நம்
    புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்
என்று வள்ளுவர் வாக்கையே சுயசரிதையில் மேற்கோள் கூறி மேலும் தொடர்ந்தார்.
    பொருளி லார்க்கின மில்லை துணையிலை;
        பொழுதெ லாமிடர் வெள்ளம் வந்தெற்றுமால்
என்று கூறிவிட்டு அது ஒரு முக்கிய கடமையென்றும் அறிவுறுத்தினார்.
“பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்”
தமது நிலையை நன்கு தெளிவுறுத்த வேண்டிய
கடமை உண்டு என்பதை மறவாமல்
“போற்றிக் காசினுக்  கேங்கி யுயிர் விடும்
மருளர் தம்மினை யேபழி கூறுவன்”
மாமகட் கிங்ருகொரு  ஊன முரைத்திலேன்
என்று கூறிய பாரதி, காசிலே ஆசை கொண்டு, அறம் தவறிய வழியிலே வீழ்ந்து அலைவுறலாகாது என்பதற்குத் தம் சொந்த வாழ்விலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகளை எடுத்துச் சொல்லவும் பாரதி தயங்கவில்லை. அதே சுயசரிதையில்,
    நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
        நல்லன் எந்தை  துயர்க்கடல் வீழ்ந்தனன்
என்று ஓரிடத்திலும் -
    அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
        லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்
    பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
        பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
    திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்
        தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
    அறமொன் றேதரும் மெய்யின்பம்; ஆதலால்
        அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்
என்று மற்றோரிடத்திலும் பாரதி அறிவித்தார்.
    பணம் என்னென்ன செய்யும் என்பதை பாரதி நன்குணர்ந்திருந்தார்.
எதிர் ஜாமீன் கட்டுரையில்-
    மிகுந்த செல்வமுடைய நாடுகளிலே கூட மனிதர் பணத்துக்காக எத்தனையோ மானங்கெட்ட  காரியங்கள் செய்கிறார்கள். ஏழைத் தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன் பிழைப்பதே பெரிய காரியம்” என்றும் செல்வம் (2) கட்டுரையில் -
    பணமுடையவனோ பணமில்லாதவனைப் பிணமாக நினைக்கிறான்” என்றும் தெரிவித்தார்.
    பணம் சுலபமாகச் சேர்க்கப்பட்டு விடுவதில்லை.பணம்  சுலபமாகச் சேராது. அதன் பின்னணியில் கடும் உழைப்பு இருந்திருக்கிறது என்று மதிப்பிடுகிறார் பாரதி. தொழிலாளர் கட்டுரையில்.
    “பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமிருப்பது காண்கிறோமாயினும், இவர்களுக்கு இந்தச் செல்வம் ஏற்படுத்திக் கொடுத்த இவர்களுடைய முன்னோர்களில், அநேகர் அல்ல ஒருவனாயினும் மிகுந்த புத்திசாலியும் அந்த புத்தியைக் கொண்டு சோம்பலின்றி விடாமுயற்சியுடன் உழைப்பவனாகவும் இருந்திருக்க வேண்டும்.
    புத்தி மாத்திரம் இருந்தால் போதாது. அதைக் கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் செல்வம் சேர இடமுண்டாகும்”.
    சோம்பலின்றி விடாமுயற்சி செய்வது மட்டும் போதுமானதாய் விடுமா? அதற்கும்  பாரதி பதிலளித்தார். நவீனத் தொழில் நுட்பம் அதை வரவேற்று விடுமா? அதற்கும் சேர்த்து பாரதி பதிலளித்தார்.
    “வியாபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதான நெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம் எக்காலத்தில் இன்றியமையாததாக திகழ்ந்துவந்திருக்கிறது. இக்காலத்திலும் இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒரு க்ஷணங்கூடத் தரித்து நிற்கமாட்டா”
    பாரதி உற்சாகமுள்ள ஒரு தொழில் முனைவர் போலச் சில சிந்தனைகளை பணம் திரட்டும் விஷயத்தில் தூண்டிவிடுகிறார். இந்தியாவின் ஏழ்மை அவன் நெஞ்சைப் பிளந்தது. வாணிகம் செய்து பொருள் திரட்டச் சொல்லும் போது வியாபார முறைகளைப் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைச் சொன்னார். வியாபாரம் பற்றி அவருக்கு ஒரு தெளிவு இருந்திருக்கிறது என்று அது புரிய வைத்தது.
    “மிகவும் ஸரஸமான இடத்தில் (பொருள்களை) விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொ ண்டுபோய் விற்க வேண்டும்'  என்ற பழைய வியாபாரக் கொள்கையை எப்போதும்  பிரமாணமாகக் கொள்ளக் கூடாது.
    விளை பொருளும், செய்பொருளும் மிஞ்சிக்கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி அவை வேண்டியிருக்கும் இடத்தில் கொண்டு போய் விற்க வேண்டும்.
    வாணிகத்தைப் பெருக்குவதில் அவருக்கு ஆர்வமுண்டு.
    “வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப் புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்“ என்கிறார்
    விவேகானந்தர் எப்படி ஊக்கமூட்டும் தீரமொழிகளை பணம் தேடும் விஷயத்தில் மக்களுக்கு வழங்கினாரோ, அதே போன்று பாரதியும் அக்கட்டுரையில்
    “வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள். புறப்படுங்கள் புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்துகொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள்.
    …எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில் எவ்விதமான ஆசை எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப் போகவேண்டும்.
    ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவிய மில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம்.
    தமிழ்ப்பிள்ளைகளே, வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும் மனவுறுதியினாலும் பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும் செல்வத்துடனும், வீர்யத்துடம் ஒளியுடனும் திரும்பி வாருங்கள்” என்று உற்சாகம் தருகிறார்.
    மகாகவியின் மனோமாளிகையில் இது மற்றொரு சாளரம்.

No comments:

Post a Comment