வீடுதோறும் கலையின் விளக்கம்
ஒரு கலைஞன் பிற தேசக்கலைகளிலிருந்து மனத் தூண்டல்களை (Inspiration) எடுத்துக் கொள்வதுண்டு. ஒரு கவிஞனும் பிற கலைகளின் மீது ஒரு பற்று கொண்டு அந்த ஈடுபாட்டில் பல தூண்டுதல்கள் பெறுவதுண்டு.
ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் நாடகக் கலையிலும் நடிப்பிலும் ஈடுபாடு காட்டியவர். புராதன கிரேக்க கவிகள் யாழ் வாசிப்பதிலும் பிற கலைகளிலும் ஈடுபாடு காட்டினர். இளங்கோவடிகளின் இசை, நாட்டிய ஈடுபாடு சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் தெளிவுபடுகிறது.
பாரதி பிறகலைகளிலும் ஆழ்ந்த ஆர்வம் காட்டியவர். அவருக்கு முறையான கர்நாடக சங்கீதம் தெரியும். தமது பாடல்களை எழுதும்போது அவை படிக்கப்படுவதைவிட பாடப்படுவதே சிறப்பு என விரும்பி அவற்றிற்கு ராகதாள அமைப்புகளைக் குறிப்பிட்டார்.
பாரதி தமது பாடல்களை தம் வாயால் பாடக் கேட்டவர் பலர்.
பாட்டு, பாரதிக்கு உயிர்த்தேன் போன்று இனித்தது. தமது கவிதைகளிலும் உரைநடையிலும் பாட்டைப்பற்றி பலமுறைக் குறிப்பிடுகிறார். பிரம்மனின் படைப்பில் பல அதிசயங்கள் கண்டு வியந்து “குயில் பாட்டு” கவிதையிலே
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடா!
என்ற பாரதி, நாதங்கள் சேரும் நயத்திலே மேலும் பறிகொடுத்து -
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ,
என்று வியந்தார்.
பொருளிலும் ஓசையும் ரஸம் கலந்திருக்க வேண்டும் பாடுகிற பாட்டு ஒன்பது சுவைகளில் ஏதேனும் ஒன்று உள்ளத்திலே தோன்றும்படி அமைய வேண்டும் என்பது பாரதி கொள்கை. தமது ஸங்கீத விஷயம் கட்டுரையில்,
“ரஸஞான மில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களில் பலர் ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர்” என்பது அறியாதவர்” என்று குற்றம் சாட்டுகிறார்.
அப்படி ரசம் தெரியாமல் பாடுவதற்குக் காரணம் இன்னதென்று தீர்மானித்து அதையும் வெளிப்படையாகத் தெரிவித்து விடுகிறார்.
முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே முதல்தர வித்துவான்.
இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே முக்காலே மும்மாகாணி வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது.
எழுத்துக்களையும் பதங்களைக் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரஸம் நியாயம் இல்லை.
தமிழிசை வளரவேண்டும் என்று பாரதிக்கு தனி ஆர்வம் இருந்தது.
“புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டு வரவேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப்பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயலவேண்டும்” என்று எழுதிய பாரதி பிறர் புதிய கீர்த்தனங்களை அமைப்பதில் பின்னடையக் கூடும் என்று ஊகித்து அவர்களுக்கு வழியும் காட்டுகிறார்.
”பூர்வ காலத்து மஹான்களுக்கு தெய்வப் பிரஸாதமிருந்தது. எங்களுக்கில்லையே, என்ன செய்வோம்?” என்று புதிய வித்வான்கள் புதிய கீர்தனங்கள் அமைப்பிலே பின்வாங்கக் கூடாது.
தெய்வங்கள் இறந்து போகவில்லை.
இப்போதும் அவற்றை உபாஸனை செய்து அவற்றின் அருள் பெறலாம்.
தெய்வப் பிரஸாதத்தை ஒருவன் பக்தியாலும் ஜீவதயையாலும் நேர்மையாலும் உண்மையாலும் இடைவிடாத உழைப்பினாலும் சம்பாதிக்க முடியும்”
பாரதி நல்ல ரசிகர். புதிது புதிதாய் இசைச்சுவை விரும்புவர். கர்நாடக சங்கீதம் அன்று மாற்றமேயன்றி இருந்த இருப்பு அவருக்கு ஒரே சலிப்பைத் தந்தது.
“நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் வாதாபி கணபதிம் என்று ஆரம்பஞ் செய்கிறார். ராம நீ ஸமானமெவரு மரியாத காதுரா வரமு லொஸகி” ஐயையோ …ஐயையோ ஒரே கதை.
எந்த ஜில்லாவுக்குப்போ,
எந்த கிராமத்திற்குப் போ,
எந்த வித்வான் வந்தாலும் ஒதே கதைதான்.
தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்”
இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடுமோ என்று உள்ளுணர்வு பாரதிக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனவேதான் மேலே தொடரும்போது -
”பூர்வீக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும் என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக்கூடாது.
பதங்களை வாய்விட்டு தெளிவாகச் சொல்ல வேண்டும், விழுங்கிவிடக் கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக்கூடாது” என்று விளக்குகிறார்.
சங்கீத ஞானம் தமது இனத்தில் காப்பாற்ற பட வேண்டும் என்பதில் அவர் அக்கறை காட்டியவர் அதனாலேயே,
“தமிழ்ச்சமைக ளிலே எப்போதும் அர்த்தம் தெரியா த பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்” என்று எச்சரிக்கிறார்.
பாட்டை மிஞ்சித் தாளம்தனித் தாண்டவம் செய்து விடக்கூடாது. தாளம் பாட்டுக்கு அடங்கியது .பாட்டுக்கு இனிமை சேர்ப்பது அதிகப்பிரசங்கித் தனம் செய்வதல்ல என்பது பாரதி கட்சி.
“பாட்டுக்குத் தாளமே ஒழிய தாளத்திற்குப் பாட்டில்லை” என்ற விஷயத்தைப் பாடுவோர் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
”பாட்டுக்கச்சேரி என்ற பெயர் வைத்துக்கொண்டு அங்கே இசையின்பங்களை காட்டுதல் முதல் காரியமாகவும், தாளத்தை உபகரணமாகவும் கொள்ள வேண்டும்”
சங்கீத வித்வான்கள் குரலைச் சாதகம் செய்வது மிகவும் அவசியம் என்று பாரதி கருதினார். நமது வித்வான்களில் பலருக்கு சாரீரபலமும் நயமும் குன்றி யிருப்பது வடநாட்டுப் பாடகர்களுடன் ஒப்பிட்டுக் காண்கையில் அவருக்குத் தெரியவந்தது. மேற்படி கட்டுரையில் எழுதினார்.
“சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீகாசியில் வாஸஞ் செய்தேன் . அங்கே, பாட்டுக்கச்சேரி செய்ய வரும் ஆண்களுக் கெல்லாம் நேர்த்தியான வெண்கலக்குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக்குரல்.
அங்கிருந்த தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றபடி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வியப்புண்டாயிற்று. ஒன்றுபோல் எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும், நயங்குறைந்தோம் இருப்பதால் காரணமென்ன?
…நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை காட்டு வெளிகளிலே போய் கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைக் பழக்க வேண்டும்.
உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்ற கருத்து உடையவர் நல்ல தொண்டைக்கும் இதற்கு நிகரான ஒரு கரு்தையே முன் வைக்கிறார்.
“உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.ஸ த்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரேவராது. கலைகள் நேர்படுவதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை
உள்ளத்திலே தைர்யம், ஸந்தோஷம், வலிமை முதலிய சுப லக்ஷணங்கள் தமிழரை க் காட்டிலும் வடநாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன.
…இந்தக் குணங்களை நமது ஜனங்களெல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஸங்கீத வித்வான்கள் இவற்றைப் பழக்கப்படுத்தினால் தான், அவர்கள் கண்டத்தில் உவகையும் வீரமும் பிறக்கும்; பாட்டிலே களையுண்டாகும்” என்றார்.
”வேயின் குழலோடு வீணைமுத லாமனிதர்
வாயினியிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி”
என்று குயில் பாட்டில் தம் நெஞ்சு பறிபோன இடங்கள் குறித்த பாரதிக்கு இசைக் கருவிகளில் ஹார்மோனியம் மட்டும் பிடிக்கவில்லை.
இதை “ஹார்மோனியம்” என்ற தலைப்பில் எழுதுகையில்
“நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள் வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்ட முடியாது. ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடையோரிடம் நமது ஸங்கீதத்தில் உள்ள விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன.
இதையெல்லாங் காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங் கூச்சல் தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது.
ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சியைக் குறையும்படி செய்ய வேண்டுமானால் கிராமந்தோறும் நாலைந்து ஹார்மோனியம் பரவும்படி செய்தால் போதும்“ என்கிறார்.
“தம்பூர்“ கட்டுரையிலோ -
பாட்டுக்கு உதவியாக சுருதி ஒலிக்க வேண்டும் பாட்டை விழுங்கும் சுருதி பிரயோசனமில்லை. அது வெறும் மடமை.
வீணை கட்டுரையிலோ -
“வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்த்ரீகள் வீணை பழகவேண்டும்.
தாள ஞானம் இசைஞாத்திற்கு அடிப்படை யாகும் என்பதால் அதை வளர்க்க வேண்டும் என்றார் பாரதி கருத்து குயில்பாட்டிலே வெளியாகிறது.
நாதம், நாதம், நாதம்
நாதத் தேயோர் நலிவுண் டாயின்
சேதம் சேதம் சேதம்
தாளம், தாளம், தாளம்
தாளத் திற்கோர் தடையுண் டாயின்
கூளம் கூளம் கூளம் என்றார்
தாள ஞானம் கட்டுரையில் -
நமது குடும்ப ஸ்தீரிகளின் பாட்டிலே முக்கியமான குறை என்னவென்றால் இவர்களிலே பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை.
தாளம் தவறிப் பாடினால் காதுக்கு விரஸமாக இருக்கும் ஜனங்களுக்கு பிரியமுண்டாகாது.
நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றைத் தாளமில்லாமற் பாடுவதற்குக் காரணம் பயிற்சிக் குறைவேயல்லாது வேறொன்றுமில்லை அவர்களுக்கு நாம் சரியான படி பாட்டுக் கற்றுக் கொடுப்பதில்லை.
பாரதியின் பாட்டின்பம் சங்கீத சபைகளிலும் கீர்த்தனைகளோடும் மட்டும் முடங்கிவிடவில்லை. அது காடு கரை நாடு நகர் மலை முகடு மகளிர் கூட்டம் என எங்கெல்லாம் இசையின்பம் என்னும் தேன் ஊறிற்றோ அங்கெல்லாம் தாவியது .குயில் பாட்டிலே
கானப் பறவை கலகலனு மோசையிலும் காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும், ஆற்று நீரோசை அருவி யொலியினிலும் நீலப் பெருங் கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஓலத்திடையே யுதிக்கு மிசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதிலூறிடுந்தேன் வாரியிலும் என்று அடுக்கிச் செல்வார். தெளிவாக விரல் சுட்டி
“ஏற்றநீர்ப் பாட்டி னிசையினிலும், நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்ச மொலியினிலும்
கண்ணமிடிப் பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்”
என்று குறிப்பிட்டார்.
இதையே ஸங்கீத விஷயம் கட்டுரையில் கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிப்பாட்டு, நலங்குப்பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ண மெட்டு.
தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக்கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா?“ என்று நினைவூட்டுவது போல் கேட்டார்.
வெறும் வாய்ப்பா ட்டு தான் பாரதிக்கு பிடிக்குமென்பதில்லை. எல்லா இசைக் கருவிகளின் இன்பமும் அவருக்குப் பிடித்தது. வீணை பழகவேண்டும் வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப்போக ஸுலபமாய் விடும்.
இந்தக் கருவியிலே தேர்ச்சியேற்பட்டால் அதுதான் வாஸ்தவமான சங்கீதத் தேர்ச்சியாகும்.
…வீணை பழகினால் அதிலேயே நல்ல தாள ஞானம் உண்டாய் விடும். வீணை மனிதர் குரல போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் வீணை மிகவும் பொருத்தமானது” என்றார்.
பாரதிக்கு நாட்டியத்திலும் ரசனை உண்டு. இது ஊழிக்கூத்து, சக்திக் கூத்து, அக்கினிக் குஞ்சு ஆகிய கவிதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதை மீண்டும் ஒருமுறை அக்கவிதைகளைப் படித்தாலேயே புலப்படும்.
தமது அபிநயம் என்ற கட்டுரையில் -
தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல் அபிநயமே கூத்தின் உயிர், தாளந் தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது” என்று குறிப்பிட்டுவிட்டு.
அவர்கண்ட நந்தனார் சரித்திரம் என்ற கதா காலட்சேபத்தில் ஒரு பாகவதர் நந்தன் பற்றி அபிநயம் செய்ததைக் குறிப்பிடுகையில்
“மேற்படி நைச்ய பாவத்திலே அதாவது அடிமைத் தோற்றம் காட்டுவதிலேகூட, இவர் இந்தப் பெண்மையைக கலப்பதனால் அதிக மிசிரம் ஏற்படுகிறது.ஆண்டையின் முன்னே வந்து நிற்கும் நந்தன் பறையன் பாதியும், தாசி பாதியுமாகக் காட்டுகிறார்” என்று குறிப்பிடுகிறார்.
ஒரு மகா கலைஞனுக்கு இருக்கவேண்டிய ரசனையும் நுண்ணுணர்வுகளும் பாரதியிடமிருந்தது.
கூத்திலும், பாட்டிலும், சுண்ணமிடிப்பவரின் சுவை மிகுந்த பாடலிலும், சிற்பத்திலும் குழலோசையிலும் மட்டுமல்ல. தம்மைச் சுற்றி விரிந்திருந்த உலகின் ஒவ்வொரு சுவை நயத்திலும் அவர் மனம் தோய்ந்துத் திளைத்ததினால் தான் அவரால் -
“எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய்“ என்று இறைவனைப் பார்த்ததும் பாட முடிந்தது.
மனித வாழ்வை ரஸம் நிறைந்ததாகக் காணவுதம், அற்பக் கவலைகளில் காலம் வீணாக்காது உயிருக்கு இன்பம் சேர்க்கவும் பாரதி காட்டும் பாதை அவரது ஈடுபாட்டின் உட்கிடக்கை.